Tuesday, May 8, 2007

கிராம இருப்பிடமும் , சுற்று வட்டாரப் பகுதிகளும்

எங்க ஊரப் பத்தி நீங்க எங்கயும் தெரிஞ்சிருச்க முடியாது,மேப்புலயும் பாத்துருக்க முடியாது வேனுமுனா நாஞ் சொல்லுறேன் எங்கேனு தெரிஞ்சுக்கங்க!

எனது கிராமம் பற்றிய.பழைய பதிவில் எனது ஊரின் பெயர் வளநாடு என்றே குறிப்பிட்டுள்ளேன்,ஆனால் எனது வீடு இருப்பது தெய்வதானம் என்னும் சிறிய பகுதியில்.வளநாடே எங்களது தாய்கிராமம் இரண்டிற்கும் இடைவெளி கிடையாது, தொடர்ச்சியாக வீடுகள்.தெய்வதானம் உருவாகி ஒரு 30 ஆண்டுகள் தான் ஆகியிருக்கலாம், இப்பொழுதும் வயக்காட்டிற்குப் போகும் பொழுது சிதிலமடைந்திருக்கும் ஒரு வீட்டக் காட்டி, எங்கப்பா, என்னிடம் இதுதான் மொதவீடு, நம்ம தெய்வதானதுக்கு மொத மொதலாக வந்த வீடுனு சொல்லுவாக.
இப்பொழுதுவரை ஒரு சந்தேகம்,யாரு ஊரின் பெயரை முடிவு செய்வது? எனது கிராமத்திற்கு பெயர்வைத்தவர் யாரென்று இதுவரைத் தெரியாது.அதேபோல் தெய்வதானம் என்றால் என்ன அர்த்தம் என்பதும் புரியவில்லை( தெய்வம் தானமாக கொடுத்த கிராமம் என்றா? இல்லை தெய்வத்திற்கு தானம் கொடுத்த கிராமம் என்றா?)வளநாட்டிற்கும் தெய்வதானத்திற்கும் இடைவெளியோ, வேறுபாடோ கிடையாது.இப்பொழுதும் பேருந்துகளில் டிக்கெட் எடுக்கும் போதும்.வீட்டிற்கு எப்பொழுதவது எழுதப்படும் கடிதத்திலும் எங்களுக்கான முகவரி வளநாடே, என்வே இனி வரும் பதிவுகளில் என் கிராமத்தின் பெயர் வளநாடு என்றே குறிப்பிடப் படலாம்

தெய்வதானம் கண்மாய்க்கரையில் அமைந்துள்ளது. கம்மாய்க்குள் இருக்கும் இரு கிருஸ்துவ கிராமங்கள் புஸ்போனம்(புஸ்ப வனம்), பொன்னக்கரை. தெய்வதாம் கிராமத்தைப் பார்த்து நிற்கும் பொழுது நொட்டாங்கப் பக்கம்(வடக்குப் பக்கம்)வளநாடு, இந்திரா நகர், காலனி, செபஸ்தியார்புரம், சேமனூர், மற்றும் கிராமமாக இருந்து நகரமாக வளர்ந்துவரும் சத்திரக்குடி.மதுரை-இராமேஸ்வரம் மெயின் ரோட்டில் சத்திரக்குடி உள்ளது!

தெய்வதானத்திலிருந்து சோத்தாங்கைப் பக்கமா(தெற்குப்பக்கம்) பாத்தா! செங்கற்படை, தேரிருவேலி, கருமல்,காக்கூர்,கடைசியா எங்கவூரின் தாலுகாவான முதுகுளத்தூர்.

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ள இருந்து முதுகுளத்தூர் இப்படியேத் தான் இருக்கு.சாதித் தலைவர்களின் சிலைகள் ரெண்டு மூனு மட்டும் கூடி இருக்கு, அப்போத் தானே சிலையின் தலையில் செருப்பு மாலை போட்டு ஏன்னு?கேட்க வருபவனின் தலையைத் தரையில் உருளச் செய்ய முடியும்,இவய்ங்க திருந்தவே மட்டாய்ங்க,எப்பவுமே இப்படித்தான். இதுதான் என் கிராம இருப்பிடம்.


அன்புடன்...
சரவணன்

கிராமத்துப் பக்கங்கள்- இதில் வரும் பதிவுகள் பற்றி



எனது கிராமத்தில் நான் பார்த்த பல விசயங்களையும் கேட்ட செய்திகளையும், அனுபவித்த கிராம வாழ்க்கையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பக்கங்கள்! இதில் வரும் பதிவுகளில் 95% உண்மையானவைகளே ஒரு 5% மட்டும் சுவாரஸ்யத்திற்கு தாளித்து எழுதப்படலாம்(நிச்சயமாக அல்ல, எழுதப்படலாம்).

இந்தப் பக்கங்களில் உள்ள பதிவுகளின் நோக்கம் கிராம வாழ்க்கை அனுபவித்திடாத அதே நேரம் அறிந்தாவது கொள்ளலாமே என்ற ஆர்வமாயிருக்கின்ற புதியவர்களுக்கும்,தங்களின் கிராமத்து நினைவுகளை புதுப்பித்து பால்ய நினைவுகளை மலரச் செய்ய பழையவர்களுக்கும் பயன்படும் என்பதற்கான எனது ஒரு சிறுமுயற்சி இந்தக் கிராமத்துப் பக்கங்கள்!



கிராமம் - ஜாதியம் இல்லாமல் இருக்காது! இங்கு ஜாதீயம் என்பது ஒருவரை பழித்துச் சொல்வதற்கு அல்ல,அவரை அடையாளைப் படுத்தவே பயன்படுகிறது,

உதாரணத்திற்கு என் அப்பாவைத் தேடிவரும் கணேசன் அப்பாவைக் காணமுடியாமல் சென்று, சிறிதுநேரத்தில் வீடு வரும் என் அப்பாவிடம் கணேசன் வந்தார் என்றால் எந்தக் கணேசன்?என்பார்(கிராமங்களில் சில பெயர்கள் மட்டுமே திரும்பத்திரும்ப பலருக்கும் வைக்கப்படும்) ஏனென்றால் எங்கள் ஊரில் வண்ணாவீட்டு கணேசன் உண்டு , பள்ளவீட்டு கணேசன் உண்டு,கீதாரி(கோனார்) கணேசன் உண்டு. இது போன்ற சமயங்களில் ஜாதி சொல்லியே சொல்வது வழக்கம். ஆமாப்பா, வண்ணாவீட்டு கணேசன் வந்துச்சு, துணி தேச்சாதுக்கு காசு கேட்டுச்சு என்பவை உதாரணங்கள்.
நிச்சயம் யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாகவோ அல்லது எதிர்கருத்துக்களுடன் விவாதிக்கும் படியாகவோ இருக்காது!

என் கிராமத்தைப் பொருத்தவரையில் அனைத்துஜாதியினரும் உண்டு, ஆசாரியில் இராமலிங்கஆசாரி ஐயா குடும்பம் மட்டுமே இருந்தது, இப்பொழுது இல்லை, ஜெயராஜ் நாடாரின் குடும்பம் மட்டுமே அவரின் இனத்தில், (நாடார் ஐயாவைப் பாக்கும் பொழுதெல்லாம் எனக்கு கள்ளிக்காட்டு இதிகாசத்தில் வரும் சைக்கிள் நாடார்தான் நினைவுக்கு வருவார், நாவலில் வருவது போன்று எப்பொழுதும் உள்ளூர் செய்திகளுடன் சைக்கிளில் வருபவர்). நாயக்கர், கவுண்டர் போன்ற ஜாதியினர் எங்கள் மாவட்டதிலேயே(இராமநாதபுரம் மாவட்டம்) இல்லை என்றே நினைக்கின்றேன்.


அன்புடன்...
சரவணன்.

கிராம தேவதைகளுக்கான வழிபாடு - முதல் பதிவு

கிராமத்துப் பக்கங்கள் என்னும் இந்த தொகுப்பில் இருப்பவை அனைத்துமே கிராமம் சார்ந்தவைகளே.அதாவது கிராமத்தில் நான் கேட்ட கதைகள், அனுபவித்த சந்தோஷங்கள், என அனைத்துமே கிராமத்தைச் சுற்றியே!கிராமம் பற்றிய பழையபதிவு.எனவே கிராம வழக்கப்படி ஒரு காரியம் செய்வதற்கு முன் கிராமத்தை சுற்றியுள்ள தெய்வங்களை வணங்குதல் முறை.அது வெளிநாடு போவதாக இருக்கட்டும்.பரீட்சை எழுதி முடித்ததாக இருக்கட்டும். கையில் ஒரு ஐந்து அல்லது ஆறு தேங்காயுடன் யாரவது கிளம்பிவிட்டால் அவர் ஒருரவுண்டு போய் அனைத்து சாமிகளையும் கும்பிடப் போகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று!

என்ன ஒரு குறை அனைத்தையும் சிதறு தேங்காய் உடைக்கமாட்டார், பொத்துனாப்புல ஒடச்சு சாமிக்கு வெறும் தேங்காய் தண்ணீ மட்டுமே, தேங்காய் அடுத்த நாள் சட்னிக்கு!

இதேபோல் கிராம வழக்கப்படி இந்தப் பதிவு தொடங்குவதற்கு முன் என் கிராமத்தைச் சுற்றியுள்ள தெய்வங்களை வணங்கலாம், பதிவில் தேங்காய் உடைக்கமுடியாதென்பதால் சும்மா கும்பிட்டுட்டு வரலாம்!நீங்களும் பக்தியுடன் பின் தொடருங்கள்(அதுக்காக மானிட்டருக்குப் பின்னால் போகவேண்டாம்!) நல்லதே நடக்கும்!



முதலில் மூலமுதற்கடவுள் பிள்ளையார், கம்மாக்கரையில் வீற்றிருப்பவரும், தற்பொழுது கும்பாபிஷேகத்திற்கு தயாராகின்றவருமாகிய பிள்ளையாரை வணங்குவோம்!(எல்லாப் பிள்ளையாரையும் போல் இந்தப் பிள்ளையாரும் அடுத்த ஊரிலிருந்து ஆட்டயப் போடபட்டதே)


கிழக்கில் இருக்கும் கருப்புளமடம்(கருப்பையா பிள்ளை மடம்) குமரக் கடவுளையும், கம்மாய் மடையினருகில் இருக்கும் மடக்கிரயானையும்(பெயர்காரணம் இதுவரை தெரிந்துகொண்டதில்லை! இனி கேட்டு அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்).



மேற்கிலிருக்கும் வயக்காட்டுக் காளியையும், வடக்கிலிருக்கும் வேலப்பூரணி(வேலப்பன் ஊரணி)ஐய்யனார்,மாவிடியான்(கோவக்காரச் சாமி, இந்தச்சாமி இருக்கிறபக்கம் இப்பொழுதும் காலை நீட்டி உட்காரவோ,படுக்கவோ எனக்கு பயம்),மற்றும் எல்லையில் இருக்கும் அய்யங்கோவில் அய்யனாரையும் வணங்கி பின் தெற்கே கம்மாய்க்குள் இருக்கும் வீரபத்திர சுவாமியையும் பக்தியுடன் வணங்கி இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றேன்.


அன்புடன்...
சரவணன்